Thursday, December 07, 2006

அக்குறும்பு - கோவி.கண்ணன்

குறும்பு பற்றி முதலாவதாய் வந்திருக்கும் கதை நடையில் ஒரு நிகழ்வு. இந்தக் கால பசங்ககிட்ட பெற்றோர்கள் என்ன எதிர்பார்க்கணும், எப்படி நடக்கணும் என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறார்.

கருத்து என்னவோ நன்றாக இருந்தாலும், சற்று அலுப்புத் தட்டுகின்ற கதை நடை, டாகுமெண்டரி பார்ப்பது போன்ற உணர்வைத் தருகிறது.

கதையில் சிறப்பு குறும்பு: ஆசிரியரின் பின் குறிப்பு:

"பின்குறிப்பு : என்ன அக்குறும்பா இருக்கு கதையில்(?) 'குறும்பையே' காணுமே ? ஹலோ ! காலேஜ் படிக்கிறப்ப, தண்ணி அடிக்கிறது, தம் அடிக்கிறது, சைட் அடிக்கிறது, முதல் காட்சி பார்க்கிறது - இது எல்லாம் குறும்பு இல்லாமல் வேறு என்னவாம் ?:):)"

Monday, December 04, 2006

செந்தில் குமரனின் குறும்பு - 1

'சின்னச் சின்ன ஆசை..சிறகடிக்க ஆசை' ன்னு பாடினது போல, அந்தந்த பருவங்களில், செய்த குறும்புகளின் நினைவலைகளை அழகாய் கிராமிய நடையில் எளிமை பட வடித்திருக்கிறார்.

இடைச்செருகல் ஏதுமின்றி, இயல்பு நடையில் கவிதையின் ஓட்டம் இருப்பது சிறப்பு.

காலைல போன புள்ள
காணலையேன்னு வீட்டிலதான்
அப்பனாத்தா கவலை கொள்ள
ரெண்டு ரூபா பந்துமா
தென்னை மட்டை பேட்டுமா
இருட்டியும் தெரு லைட்டோரமா
வெள்ளந்தியா விளையாண்டு பறந்த
காலந்தான் மறக்கவில்லை


அழகாய் பெற்றோர் மனதையும், அந்தச் சூழலையும் காட்சியாய் நிறுத்தி இருக்கிறார்.

"வெள்ளந்தித்தனம் மறந்(த்)து போன
இன்னைக்கும்
வெள்ளந்தியா சுத்தி வந்த
காலம் மட்டும் மறக்கவில்லை"


குறும்பு - 1 என்று துவக்கியிருக்கிறார், இன்னும் தொடரலாம்.


எளிய கிராமிய நடையில் அழகாய் ஒரு கவிதை.

சிவமுருகனின் குறும்பு

குறும்பு என்ற சொல்லை வைத்து 'விசு'த்தனமான ஒரு ஆரம்பத்துடன் துவங்குகிற கட்டுரை, 'குறும்பு என்றால் என்ன?' என்ற விளக்கத்துடன் பயணிக்கத் துவங்கி, விளைவுகளை சுட்டி, வகைகளை வகைப்படுத்தித் தொடர்ந்திருக்கிறார்.

'விண்வெளி வீரர் கூட சர்ச்சுக்குப் போனபின்புதான், விண்கலம் ஏறுகிறான்' என்று கவியரசரை மேற்கோள் காட்டி, குறும்பை வெளிப்படுத்துகிறார்.

கட்டுரையின் நடை ஆய்விற்கு/பரீட்சைக்கு எழுதப்படும் நடை போலிருப்பதால், சுவாரஸ்யம் குறைவாயிருப்பதுபோல் தோற்றம்?.

தொடர் பதிவு போல் தெரிகிறது, இன்னும் வர இருக்கின்ற பதிவுகளையும் பார்த்து, விமர்சனத்தைத் தொடரலாம்.